(லங்கா தமிழ் நியூஸ் 28-03-2010) யாழ். குடாநாடு இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தருணம் பார்த்து மிகக் கொடுமையான முறையில் நடத்தப்பட்டிருக்கும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனான திருச்செல்வம் கபில்நாத் என்பவர் மீதான படுகொலை என்பது யாழ்.குடாநட்டை மறுபடியும் வன்முறைக் கலாசாரத்தை நோக்கி திசைதிரும்பிவிடும் செயலாகும் என்றும், இப் படுகொலைச் சம்பவமானது தேர்தல் கால வன்முறைச் சம்பவங்களோடு தொடர்புபட்ட ஒரு நிகழ்வாகவே தெரியவந்துள்ளது எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்நிலையில் மாற்றங்களை உருவாக்குவதற்காக நடத்தப்படும் தேர்தலில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் தீயசக்திகளும் போட்டியிடும் செயலானது சமூக விரோத சக்திகளுக்கு வேட்பாளர்கள் என்ற அந்தஸ்தை கொடுக்கும் ஆபத்து நிறைந்த செயலாகும் என்றும் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவனின் மீது கொலை வெறியாட்டம் நடத்தியவர்கள் வெளிநாடொன்றிலிருந்து வந்தவர் தலைமையில் யாழ். தேர்தல்களத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுவொன்றின் வேட்பாளர்களே என்றும் விசாரணைகளின் போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டிருந்த மாணவனின் தந்தையாரான வர்த்தகர் திருச்செல்வம் அவர்கள் ஏற்கனவே தனது மகனை தேடி கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு தன்னிடம் வந்திருந்ததை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்மந்தப்பட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு எடுத்துக் கூறியதோடு இச்சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத சக்திகளை பாராபட்சமின்றி நீதி விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்றும் சட்டம், நீதி ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் இதுபோன்ற கொடூரமான செயல்கள் தொடர்ந்தும் நடவாது பாதுகாப்பதற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென்றும் பணிப்புரை விடுத்துள்ளார்.